1088 மதிப்பெண் எடுத்த பிளஸ்-2 மாணவி தற்கொலை கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கோவை அருகே பிளஸ்-2 தேர்வில் 1088 மதிப்பெண் எடுத்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.
கோவை: பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்று மனம் நொந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த மயிலேறிபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் திவ்யா என்கிற தாமரைச்செல்வி. இவர் தந்தை வேலை பார்த்த பள்ளியிலேயே பிளஸ்-2 படித்தார். பிளஸ்-2 தேர்வில் மாணவி திவ்யா 1200-க்கு 1088 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால் அவர் 1150 மதிப்பெண்ணுக்கு மேல் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார் என்று தெரிகிறது.

மேலும், அவருடன் படித்த தோழிகள் பலர் 1150-க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தனர். தனக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் திவ்யா கடந்த 2 நாட்களாக மனவருத்தத்துடன் காணப்பட்டார். வீட்டில் உள்ளவர்களுடனும், தோழிகளுடனும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.
எதிர்பார்த்ததை விட குறைவாக மதிப்பெண் எடுத்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த திவ்யா நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, பக்கத்து வீட்டுக்கு சென்றிருந்த தாயார் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய போது மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்த செட்டிப்பாளையம் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications