தமிழகத்தில் எதிர்க்கட்சி என்றாலே பாமகதான்.. சொல்கிறார் ராமதாஸ் !
சென்னை: தமிழகத்தில் எதிர்க்கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சிதான் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் அளவுக்கு நமது செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாமக தொடங்கப்பட்டு ஜூலை 16-ஆம் தேதியுடன் 27 ஆண்டுகள் நிறைவடைந்து 28-ஆவது ஆண்டு தொடங்குகிறது. சென்னை மெரீனா கடற்கரை சீரணி அரங்கில் நடைபெற்ற கட்சி தொடக்க விழாவின் நிகழ்வுகள் இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றன.

தமிழகமே வியக்கும் வகையில் 10 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். பாமகவினரிடம் அன்று காணப்பட்ட உற்சாகமும், மன உறுதியும் இன்றும் தொடர்கின்றன. ஏற்றுகொண்ட கொள்கையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், லட்சியப் பயணத்தை பாமக தொடர்கிறது.
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்துக்கு வராமலேயே களப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தின் மூலம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்த பெருமை பாமகவுக்கு மட்டுமே உண்டு. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும் பாமக பெற்றுத் தந்தது.
இனி வரும் தேர்தல்களில்...: தமிழகத்தில் எதிர்க்கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சிதான் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் அளவுக்கு நமது செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் நமக்குச் சாதகமாக இல்லாமல் இருந்திருக்கலாம். அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி நிச்சயம்.
பாமகவின் 28-ஆவது ஆண்டு விழாவையொட்டி, ஜூலை 16-ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் கட்சிக் கொடியேற்றி வைப்பதுடன், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறேன். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications