14 சீட் தேவை.. இல்லாவிட்டால் கூட்டணி இல்லை- கடைசி நேரத்தில் பாஜகவுக்கு பாமக 'செக்'
சென்னை: கடைசி நேரத்தில் பாஜகவுக்கு செக் வைத்துள்ளது பாமக. தங்களுக்குக் கண்டிப்பாக 14 சீட் தேவை என்று அது பாஜகவிடம் கூறி விட்டதாம். இதைக் கொடுக்க முன்வராவிட்டால் கூட்டணி தேவையில்லைஎன்றும் பாஜகவிடம் திட்டவட்டமாக பாமக தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தேமுதிகவிடம் மட்டும் பாஜக குழைந்து போவதாலும், தேமுதிக கேட்பதையெல்லாம் கொடுப்பதாலும் டாக்டர் ராமதாஸ் கடும் கோபமடைந்துள்ளாராம்.
வட மாவட்டங்களில் ஒவ்வொரு எம்.பி. தொகுதியிலிலும் சராசரியாக 1 லட்சம் வாக்குகளை வைத்துள்ள தங்களை விட தேமுதிக எந்த வகையில் உசத்தியாகி விட்டது என்றும் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளாராம்.

முதலிலேயே வேட்பாளர்களை அறிவித்த பாமக
பாஜகவுடன் கூட்டணி குறித்த பேச்சுக்கள் தொடங்குவதற்கு முன்பே 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு பிரசாரத்தையும் தொடங்கிய கட்சி பாமக.

கூட்டணி சேருவதில் தேமுதிகவால் சிக்கல்
ஆனால் பாஜக கூட்டணியில் இணைய தீர்மானித்த பின்னர் தேமுதிகவும் கூட்டணிக்கு வந்ததால் பாமகவுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டன.

20க்கு மேல் கேட்ட தேமுதிக
ஆரம்பத்தில் 20 தொகுதிகளும் அதற்கு மேலும் தேமுதிக கேட்டதால் அதிர்ச்சி அடைந்தது பாஜக மட்டுமல்ல, பாமகவும்தான். இதனால் பாமகவும் தான் ஏற்கனவே அறிவித்த தொகுதிகள் போக மேலும் 8 தொகுதிகள் வரை கேட்டது.

பேசிப் பேசிக் குறைத்த பாஜக
இதையடுத்து தேமுதிக மற்றும் பாமகவுடன் மாறி மாறிப் பேசியது பாஜக. இதில் பாமக தனது நிலையை சற்று மாற்றிக் கொண்டது. ஆனால் தேமுதிகதான் இதில் ரொம்பப் பிடிவாதம் பிடித்த கட்சியாகும். 18 வரை மட்டுமே அது இறங்கி வந்தது.

கடைசியாக 8க்கு கொண்டு வந்த பாஜக
இருப்பினும் விடாமல் தொடர்ந்து பேசி வந்த பாஜக, பாமகவுக்கு 8 சீட் வரை இறக்கி விட்டது. முதலில் இதற்கு பாமக தரப்பில் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், தொகுதிகளை ஏற்றுக் கொண்டதாகவும், தகவல்கள் வெளியாகின.

தேமுதிக என்ன ஒஸ்தியா...
ஆனால் தன்னிடம் மட்டுமே பாஜக இப்படி முரண்டு பிடிப்பதாகவும், தேமுதிக கேட்பதையெல்லாம் தூக்கித் தூக்கிக் கொடுப்பதாகவும் பாமக திடீரென டென்ஷனாகியுள்ளது.

தைலாபுரத்தில் அவசரக் கூட்டம்
இதையடுத்து நேற்று பிற்பகலில் தனது கட்சி நிர்வாகிகள், வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்டோரை அழைத்து அவசரமாகப் பேசினார் டாக்டர் ராமதாஸ்.

10 தொகுதிகளை விட முடியாது
இந்தக் கூட்டத்தில் கட்சியினரின் கருத்துக்களைக் கேட்ட டாக்டர் ராமதாஸ், அதன் பின்னர், ஏற்கனவே 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டோம். அவர்களும் வேலையை ஆரம்பித்து விட்டனர். இப்போது அவர்களை விலக்க முடியாது.

தர்மபுரி அவசியம் தேவை
வேண்டுமானால் ஒரு தொகுதியை மட்டும் விட்டுக் கொடுக்கலாம். ஆனால் தர்மபுரி கண்டிப்பாக தேவை. அத்தோடு ஏற்கனவே நாம் அறிவித்த 10 தொகுதிகள் தவிர மேலும் 4 தொகுதிகள் அவசியம் தேவை. அதில் நமது கூட்டணியுடன் இணைந்துள்ள சமுதாயக் கட்சிகளுக்கு தர வேண்டும். எனவே 14 தொகுதிகள் கண்டிப்பாக தேவை என்று அவர்களிடம் கூறி விடுங்கள். இல்லாவிட்டால் நமக்குக் கூட்டணியே தேவையில்லை என்றும் தெளிவாக சொல்லி விடுங்கள் என்று கூறினாராம் ராமதாஸ்.

பாஜக அதிர்ச்சி
இன்று பாஜக தலைவர்களுடன் பாமக குழுவினர் சந்திக்கும்போது இதைச் சொல்லவுள்ளனர். இதனால் பாஜக குழம்பியுள்ளது. தேமுதிக ஒரு பக்கம் முரட்டுப் பிடிவாதம் பிடித்து வருவதாலும், பாமக மீண்டும் போர்க்குரல் எழுப்பியுள்ளதாலும் அது குழப்பமடைந்துள்ளது.

பாமகவை கழற்றி விடலாம்
அதேசமயம், பாஜகவைப் பொறுத்தவரை தேமுதிகவைத்தான் அது பெரிய சக்தியாக, தேவையான கட்சியாக நினைப்பதால் பாமக தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால் அதைக் கழற்றி விடும் முடிவுக்கு கடைசிக் கட்டமாக வரக் கூடும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications