திருமா.வுக்கு எதிராக வரகூர் அருணாச்சலம் மகன்.. டாக்டர் ராமதாஸ் அதிரடி
சிதம்பரம்: சிதம்பரம் தனித் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனுக்கு எதிராக முன்னாள் அதிமுக சபாநாயகர் வரகூர் அருணாச்சலத்தின் அண்ணன் மகன் கோபாலகிருஷ்ணனை பாமக சார்பில் களம் இறக்கியுள்ளனர்.
இதனால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு நல்ல நெருக்கடியை பாமக கொடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
இருப்பினும் இந்த நெருக்கடியை சமாளித்து சிதம்பரத்தை மீண்டும் வெல்வோம் என்ற முனைப்புடன் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளனராம்.
திமுக கூ்டடணியில் விடுதலைச் சிறுத்தைகள்
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. அவர்களுக்கு 2 இடம் தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதில் சிதம்பரம் தொகுதியை திருமாவளவன் தனக்குக் கோரி வருவதாக தெரிகிறது. திமுகவும் ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் சிதம்பரத்தில் திருமாவளவன்
ஏற்கனவே இத்தொகுதியில்தான் திருமாவளவன் உறுப்பினராக உள்ளார். மீண்டும் அங்கு போட்டியிடுகிறார்.
வரகூர் அருணாச்சலம் அண்ணன் மகன்
இந்த நிலையில், தொல்.திருமாவளவனுக்கு அதிர்ச்சி கொடுக்கும்விதமாக, அந்த தொகுதியில் பாமக சார்பில், அதிமுக முன்னாள் சபாநாயகர் வரகூர்
அருணாசலத்தின் அண்ணன் மகன் கோபாலகிருஷ்ணனை டாக்டர் ராதாஸ் களம் இறக்கிவிட்டுள்ளார்.
ஒரு கை பார்க்கத் துடிக்கும் பாமக
தர்மபுரி கலவர சம்பவத்திற்கு பிறகு பாமக - விடுதலை சிறுத்தைகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இம்முறை சிதம்பரம் தொகுதியில் களம் இறங்கும் திருமாவை ஒரு கை பார்த்துவிடுவது என்றே கோபாலகிருஷ்ணண் களம் இறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
நல்ல பெயர் இருப்பதால்
காரணம், சிதம்பரம் தொகுதியில், வரகூர் அருணாசலம் குடும்பத்திற்கு ஓரளவு நல்ல பெயர் இருப்பதாலும், கோபாலகிருஷ்ணன் தலித் வேட்பாளர் என்பதாலும், கூடவே வன்னியர்கள் வாக்கும் கிடைத்துவிட்டால், கோபாலகிருஷ்ணன் வெற்றி எளிதாகிவிடும் என கணக்கு போட்டே அவரை இறக்கிவிட்டுள்ளார்களாம்.
எத்தனை பேர் வந்தாலும்
இந்த தகவல் திருமாவளவன் காதுகளுக்கு போக, எத்தனை கோபாலகிருஷ்ணன் வந்தாலும் நம்மை அசைக்க முடியாத அளவு கட்சியின் கட்டுமானத்தை கட்டவும், தேர்தல் யூத்திகளை வகுக்கவும் அவரது விசுவாசிகளுக்கு கட்டளையிட்டுள்ளாராம்.
தீப்பொறி பறக்குமா
எனவே வரும் தேர்தலில் தமிழகத்தில் தீப்பொறி பறக்கவுள்ள தொகுதிகளில் ஒன்றாகவே சிதம்பரம் இப்போதே மாறி விட்டது என்று கருதலாம்.