மண் சோறு சாப்பிடும் அமைச்சர்களுக்கு அதிகாரிகள் நிலை எப்படித் தெரியும்? – ராமதாஸ் தாக்குதல்
சென்னை: தமிழகத்தில் வேளாண்துறையைப் போல மேலும் பல துறைகளில் அமைச்சர்களால் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாமக சார்பில் 2015 - 16 ஆம் ஆண்டுக்கான வேளாண்துறை நிதிநிலை அறிக்கையை சென்னையில் ராமதாஸ் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "நெல்லை மாவட்ட வேளாண்துறை அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியை பறித்தது மட்டும் போதாது. அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும். வேளாண்துறையைப் போல மேலும் பல துறைகளில் அமைச்சர்களால் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முத்துக்குமாரசாமி மாதிரி நிறைய பேர் உள்ளனர். விவசாயி ஒரு டீ வாங்கிக் கொடுத்தால் கூட குடிக்க மறுக்கும் அதிகாரிகள் இருக்கிறார்கள். அதுபோல் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு பதவி உயர்வு சாதாரணமாக வரவேண்டும். ஆனால் அதற்கு 10 லட்சம் கேட்டால் அவர்கள் எங்கு போவார்கள்.
எல்லா அமைச்சர்களுக்கும் வேலை என்ன என்றால், பணத்தை வசூல் செய்து கப்பம் கட்டுவது. அவர்கள் கொடுக்கக் கூடிய 10 சதவிகிதம், 20 சதவிகிதத்தை வைத்துக்கொண்டு மற்ற பணிகளுக்கு செல்வது. அதாவது மண் சோறு சாப்பிட கிளம்பிடுவாங்க. பால் குடம் தூக்க கிளம்பிடுவாங்க. யாகம் வளர்க்க கிளம்பிடுவாங்க.
பல்வேறு துறைகளுக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில், தமிழகத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. ஒரே அமைச்சரிடம் பல்வேறு துறைகள் கூடுதலாக ஒப்படைக்கப்படுவதால், அவர்கள் முழுமையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.