சாலைகளுக்கு சுங்கக் கட்டணத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்... ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை : நாடு முழுவதும் நெடுஞ்சாலைத் துறை சுங்கச்சாவடிகளை உடனே முறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது...

கட்டணம் வசூலிக்கும் அதிகாரம் மூலம் தனியார் நிறுவனம் பகல் கொள்ளை அடிக்கிறது. நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.
ஒவ்வொரு சாலையிலும் ஒவ்வொரு விதமான கட்டண முறையால் வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர்.
7 ஆண்டுகளில் முதலீட்டை பெற முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. 15 ஆண்டுகளுக்கு முன் அமைத்த சாலையில் தற்போது 100% கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 10 முதல் 15% சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது.
அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்க சுங்கக் கட்டணமும் ஒரு காரணம். தரமான சாலைகளை உருவாக்கித் தர வேண்டியது அரசின் கடமை.
சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களில் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். முதலீடு எடுத்த பின் 20% மட்டுமே சுங்கக் கட்டணமாக வசூலிக்க வேண்டும்''
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications