2014ல் இழந்த மாநிலக் கட்சி அங்கீகாரத்தை மீண்டும் எப்போது பெறும் பாமக?!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி இந்த சட்டசபைத் தேர்தலிலும் மோசமான முறையில் "பெர்பார்ம்" செய்துள்ளதால் அக்கட்சி ஏற்கனவே இழந்து விட்ட மாநிலக் கட்சி அங்கீகாரத்தை எப்போது மீண்டும் பெறும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலின்போது பாமக தனது அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அக்கட்சிக்கு சட்டசபைத் தேர்தலில் 5.23 சதவீத வாக்குகளே கிடைத்தன. அதேசமயம் 3 தொகுதிகளில் அது வெற்றி பெற்றது. இதனால் தப்பியது.

அடுத்து 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் பாமக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. வாக்கு சதவீதம் 0.4 சதவீதமாக இருந்தது. இதனால் பாமக தனது மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பறி கொடுத்தது.
இப்போதைய தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டையும் பறி கொடுத்தது. மொத்தமாக 5.3 சதவீத வாக்குகளையே அது பெற்றுள்ளது. ஆனால் 6 சதவீத வாக்குகள் இருந்தால்தான் அங்கீகாரம் கிடைக்கும் என்பதாலும், குறைந்தபட்சம் 2 எம்.எல்.ஏக்களாவது இருக்க வேண்டும் என்ற விதியை அது பூர்த்தி செய்யாததாலும், அதன் அங்கீகாரம் இப்போதைக்குக் கிடைக்கும் வாய்ப்பு இல்லை.
இதனால் பறிபோன மாநிலக் கட்சி அங்கீகாரம் இந்தத் தேர்தல் மூலமாகவும் அதற்குக் கிடைக்கும் வாய்ப்பு பறி போய் விட்டது.
கடந்த 1991 சட்டசபைத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு சீட்டும் கிடைக்கவில்லை, அடுத்து வந்த 1996 தேர்தலில் 4 சீட்டுகளை அது வென்றது. 2001ல் 20 சீட்டுகளில் வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. 2006 தேர்தலில் அது 18 ஆக குறைந்தது. 2011 சட்டசபைத் தேர்தலில் 3 ஆக சுருங்கிப் போனது.
வன்னியர் சங்கமாக ஆரம்பத்தில் செயல்பட்டதை பின்னர் 1989ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றினார் டாக்டர் ராமதாஸ். கட்சிக்கு ஜி.கே.மணியை தலைவராக்கிய அவர் வன்னியர் சங்கத்தை காடுவெட்டி குருவிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு திமுக, அதிமுக, பாஜக என மாறி மாறி கூட்டணிகளை ஏற்படுத்திப் போட்டியிட்டு வரும் பாமக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த சட்டசபைத் தேர்தலில்தான் தனது பழைய பலத்தை சற்று வெளிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications