15ம் தேதி சேலத்தில் பொதுக்குழு மற்றும் பிரமாண்ட அரசியல் மாநாடு... நடத்துகிறது பாமக!
சென்னை: பிப்ரவரி 15ம் தேதியன்று சேலத்தில் பாமகவின் தலைமைச் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல அரசியல் மாநாட்டையும் சேலத்தில் அது பிரமாண்டமான அளவில் நடத்தவுள்ளது.
இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைச் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வரும் 15.02.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சேலத்தில் நேரு கலையரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு ஆகியோர் முன்னிலையேற்பார்கள். கட்சித்தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடைபெறும் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் வரவேற்புரையாற்றவுள்ளார்.

இக்கூட்டத்தில் மத்திய முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர், செயலாளர், பொருளாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வன்னியர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.
2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தமிழகத்தின் தற்கால அரசியல் சூழல் குறித்தும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து விளக்குவதற்காக அன்று மாலை 4.00 மணிக்கு சேலம் புறவழிச் சாலையில் பிரமாண்ட மாநாடு நடைபெறவிருக்கிறது. 2016 ஆட்சி மாற்றத்திற்கான மாபெரும் அரசியல் மாநாடு என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் சிறப்புப் பேருரை நிகழ்த்த உள்ளார். இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு எழுச்சி உரை ஆற்றுகிறார்.
பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஜெ.குரு, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க இம்மாநாட்டில் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பா.ம.க.வினர் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொள்கின்றனர். மாநாட்டை சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் நடத்தும் வகையில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திலுள்ள மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications