திமுக கூட்டணியில் பாமக? 'பரம எதிரிகள்' வேல்முருகன், திருமாவளவனுடன் திடீர் சமாதானம்- ராமதாஸ் வியூகம்!
சென்னை: பாஜகவுடனான கூட்டணியை கடுமையாக எதிர்க்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திடீரென அக்கட்சியின் பரம எதிரிகளான தவாக தலைவர் வேல்முருகன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோருடன் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருவதே திமுக கூட்டணிக்குள் நுழைவதற்காகத்தான் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
பாமகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. வட தமிழ்நாட்டில் ஜாதிய மோதல்களை முன்வைத்து பாமக இடம் பெறும் கூட்டணியில் ஒரு போதும் விசிக இடம் பெறாது என்கிற நிலைப்பாட்டைக் கொண்டவர் தொல்.திருமாவளவன்.

அண்மையில் பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட போது, பாமக நிர்வாகிகள் திடீரென வேல்முருகனின் வீட்டுக்கே சென்று அந்த அறிக்கையை வழங்கினர். அப்போது நெகிழ்ந்து போன வேல்முருகன், டாக்டர் அய்யா, சின்ன அய்யா (ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்) ஆகியோருக்கு நன்றி என சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
இதேபாணியில் தற்போது, மாமல்லபுரம் அருகே நடைபெறும் வன்னியர் சங்கத்தின் சித்திரை பெருவிழாவுக்கு விசிக தலைவர் திருமாவளவனுக்கு பாமக தரப்பில் நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி பாமகவின் பரம எதிரிகளாக வேல்முருகன் மற்றும் திருமாவளவனுடன் திடீரென டாக்டர் ராமதாஸ் சமாதானமாக செல்வது குறித்து பாமக நிர்வாகிகளிடம் நாம் பேசினோம். இது தொடர்பாக பாமகவின் மூத்த தலைவர்கள் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணியே வேண்டாம் என்பதுதான் டாக்டர் ராமதாஸின் நிலைப்பாடு. பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்ததாலேயே அன்புமணி ராமதாஸை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, சென்னையில் அமித்ஷாவை சந்திக்கவிடாமல் தடுத்தவர் ராமதாஸ்.
டாக்டர் ராமதாஸின் கூட்டணிக்கான விருப்பமாக அதிமுக அல்லது திமுகதான். தற்போது பாஜக கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்துவிட்டது. இதனால் திமுகவுடனான கூட்டணியில் இணைந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
ஆனால் திமுக கூட்டணியில் வேல்முருகன், திருமாவளவன் இருக்கின்றனர். பாமக உள்ளே வந்தால் திமுக கூட்டணியை விட்டு இருவருமே வெளியேறுர் ஆனால் வேல்முருக்ன, திருமாவளவன் இருவரையும் இழக்கவும் திமுக விரும்பவில்லை. இதனை புரிந்து கொண்டதாலேயே டாக்டர் ராமதாஸ், வேல்முருகன் மற்றும் திருமாவளவனுடன் சமாதானப் போக்கை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த இரு தலைவர்களையும் சமாதானப்படுத்திவிட்டால் வடதமிழ்நாட்டில் திமுக+ பாமக+ விசிக+ தவாக என அமையப் போகும் கூட்டணி மெகா வெற்றியைப் பெறும் என்பதிலும் சந்தேகமில்லை. இதற்கு முன்னோட்டம்தான் வேல்முருகன், திருமாவளவனுடனான டாக்டர் ராமதாஸின் சமாதன முயற்சிகள் என்கின்றன.












Click it and Unblock the Notifications