சட்டமன்ற தேர்தல்: பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் ஜன., 15–ல் வெளியிடப்படும்: ராமதாஸ்
நாகர்கோவில்: வருகிற சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் நிறுவன் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை பொதுமக்கள் விரும்புகிறார்கள். மதுக்கடைகள் எப்போது மூடப்படும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். நல்ல கொள்கையுடையவரையும், முன்னேற்றத்தை தரக் கூடியவரையும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பா.ம.க.வுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. குமரி மாவட்டத்துக்கு நான் அடிக்கடி வந்து செல்கிறேன். இம்மாவட்டத்தில் பா.ம.க.வை வலுப்படுத்த வேண்டும். வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் பொங்கல் பண்டிகைக்குள் (ஜனவரி 15-ந் தேதிக்குள்) வெளியிடப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இங்குள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர் நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்க குழு அமைக்கப்படும். அனைத்து நிர்வாகிகளின் கருத்துப்படி வேட்பாளர் நியமிக்கப்படுவார்கள். குமரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற உறுப்பினர்களாவது வரவேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications