மாற்றத்தை மக்கள் தந்தால்... முன்னேற்றத்தை நாங்கள் தருகிறோம்: ஜெ.குரு பேச்சு
ஈரோடு: தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் மாற்றத்தை தந்தால் பாமக முன்னேற்றத்தை தரும் என்று அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ஜெ.குரு கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஜம்பை நல்லிபாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 2016 சட்டமன்ற தேர்தல் வரைவு தேர்தல் அறிக்கை பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பா.ம.க. சட்டமன்ற குழு தலைவர் ஜெ.குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், வருகிற தேர்தலில் பா.ம.க. வெற்றி பெற்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சராவது உறுதி. இந்த தேர்தலில் தமிழக மக்கள் மாற்றத்தை தந்தால் முன்னேற்றத்தை நாங்கள் தருவோம் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு உரம், விதை, பூச்சி மருந்தை இலவசமாக வழங்குவோம். வட்டியில்லா கடன் வழங்குவோம். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை இலவசமாக அளிப்போம். கடந்த 50 ஆண்டு காலமாக தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி ஆண்டு தமிழகத்தை சீரழிந்து விட்டன. மதுவை குடிக்க கொடுத்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி விட்டார்கள்.
வருகிற தேர்தலில் பணத்துக்காக உங்கள் ஓட்டை விற்காதீர்கள். அது உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தை அடகு வைப்பதற்கு சமம். எனவே பாட்டாளி மக்கள் ஆட்சிக்கு வர பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன், தெற்கு மாவட்ட மாநில துணை பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications