ஈழத் தமிழருக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமெனில் பா.ஜ.க. அணியில் இருந்து விலக பா.ம.க. தயார்: அன்புமணி
சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிடும் எனில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற நாங்கள் தயார் என்று பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில் சென்னை திரும்பிய அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இருந்து ஏமாற்றத்துடனே திரும்பி வந்துள்ளோம். இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக அமெரிக்காவின் நீர்த்துப்போன தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியா ஏன் மவுனம் சாதித்தது எனப் புரியவில்லை. ஐ.நா.வில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மத்திய அரசும், தமிழக பாஜகவும் முதல் துவக்கம் என்று கூறுவதை ஏற்க முடியாது.
போருக்கு ஆயுதம் கொடுத்ததன் காரணமாக இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கையை ஆதரிக்கின்றன. ஆனால் இந்த விவகாரம் இத்தோடு முடிவடையக் கூடியது என்று சொல்ல முடியாது.
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கையில் இலங்கை அரசு குற்றச் செயலில் ஈடுபட்டது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவுக்கு இந்த பிரச்னையைக் கொண்டு செல்லும் அளவுக்கு, தமிழகத்தில் இருந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதோடு கடமை முடிந்துவிட்டதாக அரசும் கருதக் கூடாது. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் அவர்களின் கருத்துகளை அறிந்து, அதற்கேற்ப மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.
இதன் பின்னர் "ஈழத்தமிழர் பிரச்சினையில் உண்மையாக குரல் கொடுப்பதாக இருந்தால், பா.ஜ.க. கூட்டணியை விட்டு பா.ம.க. வெளியே வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளாரே? என்று அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்றால் பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேற பா.ம.க. தயாராக இருக்கிறது என்றார்.