இருப்போமா, வேண்டாமா?... பாமக இன்று இறுதி முடிவு!
சென்னை: பாஜக கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து பாமக இன்று தனது முடிவை சொல்லவுள்ளது.
இதுதொடர்பாக பாஜக தலைவர்களுடன் இன்று டாக்டர் அன்புமணி ராமதாஸே நேரடியாக பேச்சு நடத்தவுள்ளார். இதில் தாங்கள் கேட்கும் தொகுதிகளைத் தர பாஜக முன்வந்தால் கூட்டணியில் பாமக நீடிக்கும் என்று தெரிகிறது. அப்படி இல்லையென்றால் உடனடியாக கூட்டணியை விட்டு அது வெளியேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இறுதிக் கட்டமாக பாஜகவிடம் பேசுவது என்று நேற்று நடந்த பாமக தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாம்.
சில குறிப்பிட்ட தொகுதிகள் தொடர்பாக பாமக, பாஜக மற்றும் தேமுதிக இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. தேமுதிகவும், பாமகவும் ஈகோ பார்ப்பதாலும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்பட முன் வராததாலும் பெரும் குழப்பமாக உள்ளது.
இவர்களின் சண்டையால் மதிமுகவும் தனது வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் சிரமப்படுகிறது. மற்ற கூட்டணிக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க முடியவில்லை. தேமுதிகவும், தனது வேட்பாளர்களை முழுமையாக அறிவிக்க முடியவில்லை. பாஜகவும் வேட்பாளர்களை அறிவிக்க முடியவில்லை.
இப்படி பெரும் இடியாப்பச் சிக்கலாக மாறி நிற்கிறது பாஜக கூட்டணியின் நிலை. இப்படி ஒரு குழப்பமான பின்னணியில் எப்படி இவர்கள் கூட்டாக மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறார்கள் என்று மற்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
கடைசிக் கட்டமாக நேற்று பாஜக தரப்பிலிருந்து பாமகவுக்கு ஒரு தகவல் போனது. அதில் சேலத்தை விட்டு விடுங்கள். அது தேமுதிகவுக்குத் தரப்பட்டு விட்டது. நீங்கள் தஞ்சாவூர் அல்லது ராமநாதபுரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வளவுதான் எங்களால் முடியும் என்று கூறி விட்டார்களாம்.
இதையடுத்து பாமக தலைவர்கள் அவசரமாக கூடிப் பேசினர். அதில் பாஜகவின் ஆஃபரை ஏற்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அன் பின்னர் இன்று புதன்கிழமை பாஜகவுடன் கடைசியாகப் பேசுவது. அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்துப் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து இன்றைக்குள் பாமக, பாஜக கூட்டணி நீடிக்குமா, இல்லையா என்பது தெளிவுாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.