வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்: தமிழகம் முழுவதும் பாமக தர்ணா
சென்னை: வாக்கு பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதால் பழையபடி வாக்கு சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் சென்னை, வேலூர், கரூர் உட்பட தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமெரிக்காவே மாறியாச்சு
ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கூறியது: மின்னணு வாக்குப்பதிவு மிகப்பெரிய மோசடி. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை பல உலக நாடுகள் நிரூபித்து விட்டன. அமெரிக்கா, ஜெர்மனி உள்பட பல நாடுகள் மீண்டும் வாக்கு சீட்டு முறைக்கு மாறி விட்டன.

ஜெயலலிதாவே வழக்கு போட்டாரே..
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறு செய்ய முடியும் என்று 2001ல் உச்சநீதிமன்றத்தில், தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடுத்தார்.

சிபிஐ விசாரிக்க வேண்டும்
பல வட இந்திய அரசியல் கட்சி தலைவர்களும் வாக்குசீட்டு முறைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். வெளிப்படைத்தன்மை இல்லாத மின்னணு வாக்குப் பதிவு முறையை மாற்ற வேண்டும். தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

கோர்ட்டில் வழக்கு
சிபிஐ விசாரணை தொடர்பாகவும், மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டு வரக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார். இதுகுறித்து வட இந்திய அரசியல் தலைவர்களிடமும் எடுத்துச் செல்ல போவதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.

கலெக்டரிடம் மனு
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு கலெக்டரை சந்தித்து, இதுதொடர்பாக மனு கொடுத்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுபற்றி புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு பதிவாகும் வகையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications