விதிகளை மீறும் பொறியியல் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்: ராமதாஸ்
சென்னை: விதிகளை மீறி செயல்படும் பொறியியல் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் செயல்பாடு, கல்வித்தரம் ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
விதிகளை மீறி கல்லூரிகள் செயல்படுவதில் தமிழகம்தான் முதலிடத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட கல்லூரிகளில் 25 சதவீதம் வரை தமிழகத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் எந்த லட்சணத்தில் செயல்படுகின்றன என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும். தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் ரூ.40 ஆயிரமும், நிர்வாகக் ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் ரூ.70 ஆயிரமும் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என்று கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது.
ஆனால். இதைவிட இரு மடங்கு அதிகமான கட்டணங்களே பல கல்லூரிகளில் வசூலிக்கப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 146 தனியார் பொறியியல் கல்லூரிகள் விதிகளை மீறியிருப்பதை அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கண்டுபிடித்துள்ளது. எனினும் இதுவரை அந்தக் கல்லூரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாட்டின் வளர்ச்சிக்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவை.
எனவே, கல்வித் தரத்தைப் பாதிக்கும் வகையில் விதிகளை மீறி செயல்படும் கல்லூரிகளை அரசே ஏற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.