பாஜக கூட்டணிக்கு பாமக வந்தால் அதுக்குத்தான் நல்லது.. பொன்னார் பொளேர்!
மதுரை: பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் நிச்சயம் பாமகவுக்குப் பலன்தான் கிடைக்கும். இதை அக்கட்சி யோசிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரைக்கு நேற்று வந்த அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசுகையில்,

எங்கள் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை 12-ந்தேதிக்குள் முடிவடைந்து தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு விடும்.
எல்லா கட்சிகளிலும் பிரச்சினைகள் உள்ளன. எங்கள் கூட்டணியில் உள்ள பாமக மற்றும் தேமுதிக ஆகியவற்றின் கொள்கைகளில் மாறுபாடு இருக்கலாம். ஆனால் கூட்டணியில் அவை இணைந்து செயல்படும்.
பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் பாமகவுக்கு நிச்சயம் பலன் உண்டு. தமிழகத்தில் இந்த கூட்டணிக்கு பாஜகதான் தான் தலைமை ஏற்கும். நரேந்திரமோடி இங்கு நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்வது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. கட்சி நிர்வாகிகளுடன் அது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.
ஆம் ஆத்மி கட்சியினர் எங்களை எதிர்த்து போட்டியிடுகிறார்கள். அரசியலில் இது சாதாரணமானதுதான். எங்கள் கூட்டணியில் அகில இந்திய ஜனநாயகக்கட்சி, கொங்கு நாடு கட்சி ஆகியவையும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்றார் ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications