முதலாளி வீட்டிலேயே கைவரிசை காட்டிய வேலைக்கார தம்பதி - 90 பவுன் திருட்டு
திருப்பூர்: திருப்பூரில் முதலாளி வீட்டில் இருந்து 90 பவுன் நகைகளை கொள்ளையடித்த தொழிலாளி தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை நகரில் ரயில் நிலையம் அருகே உள்ள கௌஸ் காலனியைச் சேர்ந்தவர் லாசர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த இருபது ஆண்டுகளாக உடுமலையில் சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

கடந்த மே மாதம் 3ஆம் தேதி லாசர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். அப்போது லாசர் வீட்டின் கதவை உடைத்து அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 90 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச்சென்றனர்.
இதுதொடர்பாக உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், லாசரின் மளிகைக் கடையில் வேலை செய்து வரும் சையது இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி சம்சாத் ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவர்களிடம், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள், லாசர் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, தம்பதியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்த நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், "சையது இப்ராஹிமின் செல்லிடப்பேசி எண்ணை ஆய்வு செய்ததில் அவரும், அவரது மனைவி சம்சாத்தும் இந்தக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நகையை மீட்கும் நடைவடிக்கை நடைபெற்று வருகிறது" என்றனர்.












Click it and Unblock the Notifications