திருடர் குல திலகங்கள்.. 50 சைக்கிள்களைத் திருடிய 4 "திகில் பாண்டிகள்" கைது!
விலை உயர்ந்த 50 சைக்கிள்களை திருடி சாதனை படைத்த திருடர் குல திலகங்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னையில் 49 சைக்கிள்களைத் திருடிய 4 திருடர்கள், 50வது சைக்கிளைத் திருடியபோது சிக்கிக் கொண்டனர். அவர்களைப் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து 49 சைக்கிளை திருடியவர்கள் 50 சைக்கிளை திருடிய பின்னர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
சென்னை அசோக்நகரை சேர்ந்தவர் ராஜன். இவர் இம்மாதம் 11ம் தேதி நாராயணன் சாலையில் உள்ள ஒரு பள்ளிக்கு சைக்கிளில் சென்றார். அங்கு சைக்கிளை நிறுத்திவிட்டு வந்த வேலையை முடிக்கச் சென்றார். திரும்பி வந்து பார்க்கும் போது விட்டுச் சென்ற இடத்தில் சைக்கிள் அபேஸ் ஆகியுள்ளது கண்டு திடுக்கிட்டார்.

பள்ளி வளாகத்தில் சுற்றி சுற்றி பார்த்தும் சைக்கிள் கிடைக்காததால் அசோக் நகர் காவல் நிலையத்தில் சைக்கிள் காணவில்லை என்று ராஜன் புகார் அளித்தார். இதனையடுத்து, அசோக் நகர் உதவி ஆணையர் அரிக்குமார் தலைமையில் சைக்கிள் திருடும் மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையின் போது, அசோக் நகரில் பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, எர்ணாவூர் 47பிளாக் பகுதியை சேர்ந்த 39 வயதான செந்தில், மணலி புது நகரை சேர்ந்த 35 வயதான அக்பர், கொளத்தூர் பகுதியை சேர்ந்த 22 வயதான குமார், தண்டையார் பேட்டை பகுதியை சேர்ந்த 32 வயதான முத்துக்கனி ஆகியோர் கும்பலாக சைக்கிளை திருடி விற்றது தெரிய வந்தது.

இந்த நான்கு பேரும் திருட்டில் யார் யார் எந்தெந்த வேலையை செய்ய வேண்டும் என்று பிரித்துக் கொண்டனர். அதன்படி, திருடும் வேலையை அக்பரும் செந்திலும் செய்தனர். மற்ற இருவரும் சைக்கிளை விற்பனை செய்யும் வேலையை செய்துள்ளனர்.
இவர்கள் சைக்கிள் திருடுவதற்கு வைத்துள்ள ஒரே கட்டுப்பாடு அது விலை உயர்ந்த சைக்கிளாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான். அதற்காக விலை உயர்ந்த சைக்கிள் எங்கு கிடைக்கும் என்று தேடித் தேடி திருடி வந்தனர். பள்ளிக் கூடங்கள், டியூஷன் சென்டர், பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் அகிய இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி கஷ்டப்பட்டு இந்த 50 சைக்கிளையும் திருடியுள்ளனர் இந்த நால்வரும்.

இந்த 4 பேரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்த 50 சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, அவர்கள் மீது எம்ஐஆர் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications