முத்துக்குமார் என்று கூறி என் மகனை கைது செய்த போலீஸ்... ராம்குமாரின் தந்தை பேட்டி !
நெல்லை: முத்துக்குமார் என்று கூறி என் மகனை போலீசார் கைது செய்துள்ளதாக சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கடந்த 1ம் தேதி நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்வதற்காக போலீசார் சென்றபொழுது ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியானது.
சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார். இதனிடையே அவரது தந்தை பரமசிவன், தாயார், இரு தங்கைகளையும் போலீஸார் ரகசிய இடத்திற்குக் கொண்டு போய் தீவிரமாக விசாரித்தனர். இது பெரும் சர்ச்சைகளையும் கிளப்பியது.
இந்நிலையில், ராம்குமாரின் தந்தை பரமசிவன் அவரது ஊரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது மகன் ராம்குமார் கல்லூரி தேர்வில் 5 பாடங்களில் தோல்வியடைந்ததை தொடர்ந்து சென்னைக்கு சென்று சிறப்பு வகுப்பில் சேரவேண்டும் என்றார். அதற்காக அவர் சென்னை சென்றார்.
கடந்த சிலதினங்களுக்கு முன் செலவுக்கு பணம் வேணும் என்று கூறி வாங்குவதற்காக இங்கு வந்தார். அப்போது தான் நள்ளிரவில் போலீசார் வந்து 'முத்துக்குமார் முத்துக்குமார்' என்று கூப்பிட்டனர். சப்தம் கேட்டு எனது மகள் தான் கதவை திறந்தார். திடீர் என்று வெளியே போலீசார் நின்றுக் கொண்டு உங்கள் மகன் கழுத்தை அறுத்துக்கொண்டார் என்று கூறினர். இதனைப் பார்த்த நான் மயக்கம் அடைந்து விட்டேன் என்று கூறினார்.
மேலும், எனது மகன் இந்த தவறை செய்யவில்லை. சுவாதியை ராம்குமார் தான் கொலை செய்தார் என்பதை ஏற்க மாட்டேன். இந்த வழக்கில் இருந்து ராம்குமார் கண்டிப்பாக விடுதலையாவார் என ராம்குமாரின் தந்தை தெரிவித்தார்.