பிரியாணியில் முடி.. தகராறு செய்த வாடிக்கையாளர்கள்.. விசாரிக்க வந்த ஏட்டு மண்டை உடைந்தது
சென்னை: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பிரபல ஹோட்டல் ஒன்றில் பிரியாணியில் முடி கிடந்ததைத் தட்டிக் கேட்டதால், சாப்பிடச் சென்றவர்களுக்கும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையே மோதல் உண்டானது. இது தொடர்பான விசாரணைக்கு சென்ற போலீஸ்காரருக்கு மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ராஜி, தாமஸ், ஷேவியர், சுரேந்தர் என்ற 4 பேர் வேளாங்கண்ணி செல்வதற்காக நேற்றிரவு சென்னை வந்தனர். அங்கிருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் மூலம் அவர்கள் வேளாங்கண்ணி செல்லத் திட்டமிட்டனர்.
அப்போது இரவு சாப்பாட்டிற்காக எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பிரியாணியில் முடி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், ஹோட்டல் ஊழியர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் முற்றி மோதலானது.
இது குறித்து தகவல் அறிந்து, விசாரணைக்காக ஆல்பன் என்ற போலீஸ்காரர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தகராறில் ஈடுபட்டவர்களை அவர் கண்டித்துள்ளார். ஆனால், அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து ஆல்பனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், அவரது மண்டை உடைந்தது. உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதை தொடர்ந்து எழும்பூர் போலீசார் விரைந்து சென்று, போலீஸ்காரரை தாக்கிய ராஜி, தாமஸ், ஷேவியர், சுரேந்தர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.