விழுப்புரத்தில் வீட்டில் பதுக்கி வைத்த வெடி பொருட்கள் பறிமுதல்- 3 பேர் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒரு வீட்டில் வெடிமருந்துக்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.அப்போது அந்த வீட்டில் 3800 ஜெலட்டின் குச்சிகள் 1050 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பயங்கர வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேப் போல் மரக்காணத்தை அடுத்த பிரம்மதேசம் அருகே சொக்கந்தாங்கல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் கற்களை பெயர்த்தெடுக்க பயன்படுத்துவதற்காக அரசு அனுமதியின்றி வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பிரம்மதேசம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பிரம்ம தேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப் இன்ஸ்பெக்டர் தனஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 10 டெட்டனேட்டர் குச்சிகள் உள்பட 3 ஆயிரம் கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூபாய் 1 லட்சமாகும். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வெடிபொருட்களை பதுக்கிய தொழிலாளி ராமதாஸ் என்பவரை கைது செய்தனர்.