தடையை மீறி போராட்டம்... பாரதிராஜா, சீமான், வைரமுத்து உள்பட 500 பேர் மீது வழக்கு!
ஐபிஎல் போட்டி நடைபெற எதிர்ப்பு தெரிவித்து நேற்று சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என்று சென்னை அண்ணாசாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழர் கலை இலக்கிய பேரவையை சேர்ந்த பாரதிராஜா, கவுதமன், வெற்றிமாறன், சீமான், வைரமுத்து உள்பட 500 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் இளைஞர்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில் அவர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சியினரும், அரசியல் சாரா அமைப்பினரும் கேட்டுக்கொண்டனர். எனினும் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நடத்தப்படும் என்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று பரப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் போட்டி நடந்தது.

எனினும் பல்வேறு அரசியல் கட்சியினரும், தமிழர் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தொடங்கப்பட்ட தமிழர் கலை பண்பாட்டு பேரவையினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாசாலையில் இருந்து சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர், சிலர் மீது லேசான தடியடியும் நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அண்ணாசாலை பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, கவுதமன், சீமான் உள்ளிட்டோர் கலைந்து செல்லாமல் இருந்ததால் அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கைதாக ஒப்புகொண்டனர். ஐபிஎல் போட்டிகள் நடந்தாலும் தமிழர்களின் உரிமைக்காக கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்றதன் மூலம் போராட்டம் வெற்றி பெற்றதாக பாரதிராஜா தெரிவித்தார்.

இந்நிலையில் அண்ணாசாலை, சேப்பாக்கம் மற்றும் மைதானம் அமைந்துள்ள பகுதியில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிராஜா, வைரமுத்து, சீமான், கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 500 பேர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.













Click it and Unblock the Notifications