திருவள்ளூர் மாவட்டத்தில் திடீர் போலீஸ் குவிப்பு.. ஆந்திராவிலிருந்து நக்சல் ஊடுருவலா?
வேலூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மாலை 7 மணியளவில் ஆந்திர வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து திருத்தணி நகர் முழுவதும் திடீர் என்று நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டு சென்னையில் இருந்து வரும் வாகனங்கள், பெங்களூரில் இருந்து வரும் வாகனங்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
திருவள்ளூர் எஸ்பி சாம்சன், திருத்தணியில் முகாமிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். வேலூர் மாவட்ட எஸ்பி பகலவனும், அரக்கோணம் நகர காவல்நிலையத்தில் முகாமிட்டு அரக்கோணம் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.
அங்கு முக்கிய கொலை வழக்கில் தொடர்புடைய ஒரு ரவுடியை பிடித்து வைத்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது தவிர திருவள்ளுர், வேலூர் மாவட்ட முழுவதும் ஆந்திர மாநில எல்லைகளில் போலீசார் வாகன தணிக்கை செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.