சுவாதி கொலையாளியை கண்டுபிடிக்க ஹைகோர்ட் 2 நாள் கெடு... புதிய வீடியோ காட்சிகள் சிக்கியது
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கொலையாளியை 2 நாட்களில் கண்டுபிடிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இல்லாவிட்டால் நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சுவாதி கொலை வழக்கு விசாரணையை சென்னை போலீசார் தொடங்கியுள்ளனர். ரயில்வே காவல்துறை ஒப்படைத்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை தொடங்கியுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. கொலையாளியைப் பற்றிய புதிய வீடியோ காட்சிகள் சிக்கியுள்ளதால் அதனடிப்படையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி. இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜீனியராக பணிபுரிந்து வந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலையத்தில் கொலை நடந்த போதும், கொலையாளி குறித்த எந்தவித தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. நுங்கம்பக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் அருகில் இருந்த வீடு ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
பிளாட்பாரத்தில் வேகமாக ஓடும் ஒரு இளைஞர், பிளாட்பாரத்தை கடந்து பின்னர் சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் காட்சிகள் சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள அந்த இளைஞரின் அடையாளங்கள், சந்தேகிக்கப்படும் இளைஞரின் அடையாளங்களோடு ஒத்துப்போவதாகவும், சந்தேகப்படும் நபர்தான் கொலையாளி என்பதை சம்பவத்தை நேரில் பார்த்தவர் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும் 4 நாட்களாக கொலைக்கான காரணத்தைக்கூட கண்டறிய முடியாதது போலீசாருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனிடையே சுவாதி வழக்கு தற்போது சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. 3 தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

கொலையாளி தொந்தரவு
கொலையாளி அவன்தான் என்று கன்பார்ம் செய்துள்ள போலீசார் கொலையாளியை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவித்துள்ளனர். கொலையாளி சுவாதியை பல மாதங்களாக பின் தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கலாம் என கருதப்படுவதால் அது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு
இதற்காக சுவாதியின் வீட்டில் இருந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வரை 20க்கும் மேற்பட்ட வீடுகளில் பதிவான சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் புதிய திருப்பமாக மேலும் 2 வீடியோ காட்சிகள் சிக்கி உள்ளன. கொலை நடப்பதற்கு முன்பு சுவாதி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது டீக்கடையில் நின்றுகொண்டிருக்கும் நபர் சுவாதியை நோட்டம் விடுவதும், பின் தொடர்வதும் பதிவாகியுள்ளது.

அடையாளம் காண்பதில் சிக்கல்
குற்றவாளியை அடையாளம் காணும் அளவுக்கு முகம் தெளிவாக தெரியாததால் அதுவும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கொலைக்கு பின்னர் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள குற்றவாளியின் உருவத்தை பிறர் அடையாளம் காணும் அளவுக்கு பெரிதுபடுத்தியுள்ள போலீசார், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அவனைப் பிடித்து விடுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கொலையாளி பிடிபடுவான்
சுவாதியை கொலை செய்து நபர் வெளி மாநிலத்திற்கோ, வெளிநாட்டிற்கோ தப்பிச் செல்லவில்லை என்றும், பிடிபட்டு விடுவோம் என்ற அச்சத்தில் சென்னையிலேயே எங்கோ ஒரு இடத்தில் தலைமறைவாக பதுங்கியிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விரைவில் குற்றவாளியை பிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 2 நாட்களுக்குள் கொலையாளி பிடிபடுவானா?












Click it and Unblock the Notifications