அடுத்த ஆசிட் டெஸ்ட்... கொடநாடு எஸ்டேட் கொலை.. சசி, தினகரனிடம் விசாரணை நடத்த திட்டம்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்டுப்பாட்டில் இருந்ததால் கொலை, கொள்ளை குறித்து அவர்களிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.
குன்னூர்: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்டுப்பாட்டில் இருந்ததால் கொலை, கொள்ளை குறித்து அவர்களிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.
கடந்த 24-ஆம் தேதி கொடநாடு எஸ்டேட்டில் 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடிக்க வந்தனர். அப்போது அவர்களை அங்கிருந்த காவலாளிகள் தடுக்க முயன்றனர்.
அப்போது அந்த மர்மக் கும்பல், காவலாளிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியதில் ஓம்பகதூர் என்ற காவலாளி உயிரிழந்துவிட்டார். மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணை
இந்நிலையில் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர். அவர்களுக்கு பல்வேறு தடயங்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், திருச்சூர், பாலக்காடு ஆகிய இடங்களில் தேடி வந்தனர்.

நகை, ஆவணங்கள் கொள்ளை
இந்நிலையில் பங்களாவில் ஜெயலலிதா அறையில் இருந்த 3,000 பவுன் தங்க நகைகளும், உயில் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், 3 சூட்கேஸ்களில் இருந்த ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸார் கருதுகின்றனர். மேலும் விலை மதிப்பில்லாத கற்களும் கொள்ளைபோனதாக தகவல்கள் வெளியாகின.

முன்னாள் கார் டிரைவர் மரணம்
ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ், அவரது கூட்டாளி சயான் உள்பட 11 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். சயான் பாலக்காடு அருகே விபத்தில் காயமடைந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

8 பேர் கைது
இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த ஹவாலா கும்பல் தலைவர் மனோஜ், சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், சங்கனச்சேரியை சேர்ந்த சாமி என்ற மனோஜ் மற்றும் ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள குட்டி என்கிற பிஜனை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

சசிகலா, தினகரனிடம் விசாரணை
பங்களாவில் இருந்து என்னென்ன கொள்ளையடிக்கப்பட்டது என்பது மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவும், தினகரனும் இந்த பங்களாவை நிர்வகித்து வந்தததாக கூறப்படுகிறது. இதனிடையே இருவரும் வெவ்வேறு வழக்குகளில் சிறைகளில் உள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்துவது குறித்து உயர் அதிகாரிகளுடன் போலீஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications