மருத்துவ கல்லூரி சீட் மோசடி விவகாரம்: எஸ்.ஆர்.எம். நிறுவனர் பச்சமுத்துவிடம் போலீஸ் விசாரணை
சென்னை: மருத்துவக்கல்லூரி சீட்டுகளை விற்ற விவகாரம் தொடர்பாக எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் சேர மாணவர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்த மதன் கடந்த மே மாதம் 29-ம் தேதி மாயமானார். இதனிடையே மாணவர்களிடம் பணம் பெற்றது குறித்து கடிதம் ஒன்றையும் அவர் வெளியிட்டார். அக்கடிதத்தில் மாணவர்களின் பணத்தை எஸ்.ஆர்.எம். கல்லூரி நிர்வாகிகளிடம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மதன் மாயமானதல் மாணவர்கள் பச்சமுத்து வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து 72.5 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு தலைமறைவான மதனைக் கண்டுபிடிக்கக் கோரி பாதிக்கப்பட்ட 109 மாணவர்களும் பணத்தை மீட்டுத்தரக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தனர். மேலும், 109 பேரில் 14 பேர் பணத்தை மீட்க உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
இதையடுத்து, இந்திய ஜனநாயகக் கட்சி மாநில மருத்துவர் அணிச் செயலாளர் பார்க்கவன் பச்சமுத்து, மதுரை மாவட்டச் செயலாளர் சண்முகம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பாபு, மதனின் நண்பர் விஜயபாண்டியன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாயமான மதன் எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்பதை 3 மாதங்களாகியும் கண்டுபிடிக்க முடியாததால் காவல்துறைக்கு நெருக்கடி அதிகரித்தது. இந்த வழக்கில் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் விசாரிக்கவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகளும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் விசாரணை நடத்தினர்.
மதன் மாயமானது தொடர்பாகவும், எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லுாரியில் சீட் வாங்கித்தர பணம் பெற்றது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பச்சமுத்து விரைவில் கைது செய்யப்படக் கூடும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications