பர்கூர்: எருதுவிடும் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் -கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி
பர்கூர்: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அடுத்து தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில் வட தமிழகமாக வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் எருதுவிடும் விழா நடத்துவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் எருதுவிடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, மாநிலத்திலிருந்தும் சுமார் 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
சீறிப்பாய்ந்த காளைகளை பிடிக்க ஆயிரக்கணக்கான வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது காளை முட்டியதில் ஏராளமான வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய விழா மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
எருதுவிடும் விழாவை காண தமிழகம் உட்பட கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலிருந்து சுமார் 20 ஆயிரம் பேர் குவிந்தனர். இதனால் திரும்பும் திசையெல்லாம் மனித தலைகளாக தெரிந்தன. பார்வையாளர்கள் அதிக அளவில் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. ஓடிய காளை வழியில்லாமல் பொதுமக்கள் கூட்டத்தில் நுழைந்தது. இதில் காளை முட்டியதில் ஏராளமான பொதுமக்கள் காயம் அடைந்தனர்.
போலீசார் தடியடி
இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் தடியடிக்கு பயந்து நான்கு புறங்களிலும் பொது மக்கள் ஓடினர். இதனால் எருதுவிடும் விழா சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.