ரங்கசாமி கூட்டத்தில் ரகளை.. போலீஸ் தடியடி.. 2 பேருக்குக் காயம்
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது திடீரென ரகளை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடியில் குதித்தனர். இதில் 2 பேருககுக காயம் ஏற்பட்டது.
தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, பாகூர் தொகுதி கிருமாம்பாக்கத்தில் ரங்கசாமி காலை 11 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காலை 10 மணி முதலே அந்த பகுதி மக்கள், என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் திரண்டனர்.
ஆனால் ரங்கசாமி அங்கு வருவதற்கு காலதாமதம் ஆனது. இதனால் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பகல் 2 மணியளவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கிருமாம்பாக்கம் வந்தார். அவர் திறந்த ஜீப்பில் நின்றபடி கொளுத்தும் வெயிலில் திரண்டிருந்த மக்களிடையே பேசினார்.
அப்போது என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் 2 பிரிவினரிடையே வாய் தகராறு ஏற்பட்டு அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். முதல்வர் முன்பே நடந்த இந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் மோதலை தடுக்க முயன்றனர். ஆனால், தொண்டர்கள் ஒருவரையொருவர் தாக்க தொடங்கினர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
மோதல் மற்றும் தடியடி சம்பவத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மோதல் காரணமாக ரங்கசாமி தனது பிரசாரத்தை நிறுத்தி விட்டு வேறு கிராமத்திற்குப் போனார்.