ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த போலீசார் கெடுபிடி... கடுப்பான அதிமுக தொண்டர்கள்
ஜெயலலிதாவின் உடலடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அதிமுக தொண்டர்கள் சென்று அஞ்சலி செலுத்த போலீஸ் நேற்று இரவு அனுமதி மறுத்தனர்.
சென்னை: மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகில் மறைந்த ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அதிமுக தொண்டர்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாலை 6 மணிக்கு மேல் இருட்டத் தொடங்கிய உடன் போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தின் அருகில் செல்ல கெடுபிடிக் காட்டினர்.
உடல் நலமில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, சிகிச்சைப் பலனின்றி கடந்த 5ம் தேதி காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தைப் பார்ப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும் அதிமுக தொண்டர் சென்ற வண்ணம் உள்ளனர்.

இதனால் எம்.ஜி.ஆர். நினைவிடமே கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அதிமுக தொண்டர்கள் பலர் அங்கு வந்து மொட்டை அடித்து துக்கத்தை அனுசரிப்பது, கற்பூரம் ஏற்றுவது, மலர் தூவி மரியாதை செய்வது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 6 மணிக்கு மேல் இருட்டத் தொடங்கிய உடன் போலீசார் அதிமுக தொண்டர்களை ஜெயலலிதாவின் உடலடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த அதிமுக தொண்டர்கள் ஆத்திரமடைந்தனர். தங்கள் தலைவிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்த போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications