ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுமாறு உத்தரவு.. கூவத்தூரில் போலீஸ் குவிப்பு.. பரபரப்பு!
கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேறுமாறு போலீஸ் உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேறுமாறு போலீஸ் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக ரிசார்ட்டில் தங்கியுள்ளதால் உடனே வெளியேறுமாறு போலீஸ் வலியுறுத்தியுள்ளது.
கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது சசிகலா சிறைக்குப் போகவுள்ளதால், அவர்களை மீட்க முதல்வர் ஓ.பி.எஸ். அணி தீவிரம் காட்டி வருகிறது. இதனால் கூவத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கஜலட்சுமி பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டையும் போலீஸார் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் ரிசார்ட்டை சுற்றி குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுமாறு போலீஸ் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக ரிசார்ட்டில் தங்கியுள்ளதால் உடனே வெளியேறுமாறு போலீஸார் வலியுறுத்தி வருகின்றனர். விருப்பத்துடன் தான் நாங்கள் ரிசார்ட்டில் தங்கி இருக்கிறோம் எனக் கூறி சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதனிடையே ஈ.சி.ஆர். சாலையில் இருந்து சுமார் 2 கிலேமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோல்டன் பே ரிசாரட் பகுதி வரை தற்போது மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ரிசார்ட்டில் உள்ள மின் விளக்குகள் ஜெனரேட்டர் மூலம் இயக்கப்படுகிறது. சசிகலா ஆதரவாளர்கள் ரிசார்ட் பகுதிக்குள் நுழையாதவாறு தடுப்புகள் அமைத்து போலீாசார் கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications