போலீஸார் கடுமையாக தாக்கியதில் பார்வையை இழந்த வாலிபர்.. நெல்லையில் பரபரப்பு
நெல்லை: நெல்லை அருகே போலீசார் தாக்கியதில் வாலிபர் பார்வை பறிபோனது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் கண்ணன். விவசாயியான இவர் நேற்று இரவு 11 மணி அளவில் வயலுக்கு சென்று விட்டு அங்குள்ள சந்தன மாரியம்மன் கோவில் அருகே வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் கண்ணனிடம் இந்த நேரத்தில் எங்கு சென்று விட்டு வருகிறாய் என கேட்டுள்ளனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த போலீசார் கண்ணனை சராமரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவரது தம்பி கூறுகையில், எனது அண்ணனை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் அவரது இடது கண் புருவத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் 12 தையல் போட்டுளளனர். தாக்குதலில் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு பார்வை மீண்டும் வராது எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட பொதுமக்க்ள் சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர் போராட்டம் நடத்திய மக்களை அமைதிப்படுத்தி, கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இது போல் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று அங்கும் அவரிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது கண்ணனை பிடிக்க முயன்றபோது அவர் ஓடி கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications