சசிகலா புஷ்பா மீதான வேலைக்காரப் பெண்களின் புகார்... விசாரணையைத் துவக்கினார் ஏஎஸ்பி
தூத்துக்குடி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா எம்பி மீது அவரது வீட்டில் வேலை பார்த்த இரண்டு பெண்கள் அளித்துள்ள புகார் குறித்து போலீசார் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை அடித்து சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா, அடுத்த அதிரடியாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தன்னை அடித்ததாகவும், எம்.பி. பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும் ராஜ்யசபாவில் அழுது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா மீது, அடுக்கடுக்கான புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.
அந்தவகையில் சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை பார்த்த நெல்லை திசையன்விளையை சேர்ந்த பானுமதி என்பவர் தனது சகோதரி ஜான்சிராணியுடன் சேர்ந்து வந்து கடந்த சில தினங்களுக்கு தூத்துக்குடி எஸ்பி அலுவலக்தில் புகார் செய்தார். அதில் சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் உள்ளிட்டோர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், சசிகலா புஷ்பா தங்களைக் கடுமையாகத் தாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த புகாரை விசாரிக்க ஏஎஸ்பி தலைமையில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் தங்களது முதல் கட்ட விசாரணைய துவங்கியுள்ளனர். இதுகுறித்து எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் கூறுகையில், 'சசிகலா புஷ்பா கணவர் மற்றும் மகன் மீதான புகார் குறித்த விசாரணை ரூரல் ஏஎஸ்பி தீபா கனிட்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும். புகாரின் அடிப்படையில் முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் வழக்கு பதிவு செய்யப்படும்' என்றார்.
இந்நிலையில் சசிகலா புஷ்பா மீது மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மேலும் புகார்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு காலம் அவரின் அரசியல் பலம் அறிந்து புகார் கொடுக்க பயந்தவர்கள் இப்போது வெளியே வர தொடங்கியுள்ளனர். இதனால் அவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications