உசிலம்பட்டியில் சப்தமில்லாமல் நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்
மதுரை: உசிலம்பட்டியில் நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாதி உணர்வு ஆழமாக உள்ளது. இதனால் பெண் குழந்தைகள் பெரிய மனுஷியாகிவிட்டால் சில மாதங்களிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் உள்ளது.
காதும், காதும் வைத்தது போன்று சப்தமில்லாமல் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். இந்நிலையில் பெருமாள்பட்டியைச் சேர்ந்த ஜெகதி என்பவருக்கும், 16 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இன்று திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் மண்டபத்திற்கு வந்துவிட்டனர். இந்நிலையில் வருசநாடு ஊரக வளர்ச்சி அலுவலர் தேன்மொழிக்கு குழந்தை திருமணம் நடப்பது குறித்து தகவல் கிடைத்தது.
அவர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடனடியாக வந்து திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் மணமகன், அவரின் பெற்றோர், மணமகளின் பெற்றோர் மற்றும் திருமண மண்டப உரிமையாளர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.