தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய ‘வெடிகுண்டு’ முருகேசன்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக சென்ற சப்-இன்ஸ்பெக்டரை, வெடிகுண்டு முருகேசன் என்பவர் அரிவாளால் வெட்டிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உமரிக்காட்டை சேர்ந்தவர் உமரிசங்கர். முன்னாள் மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளராக இருந்த இவர், தற்போது முக்காணி கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக இருந்து வருகிறார்.
உமரிசங்கர் இன்று காலை ஆத்தூரில் உள்ள ஒரு சலூன் கடையில் முடிவெட்டிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, உமரிக்காட்டை சேர்ந்த வெடிகுண்டு முருகேசன் (42) என்பவர் அந்த சலூன் கடைக்கு வந்துள்ளார். ஒரே ஊர்க்காரர் என்பதால் உமரிசங்கர், வெடிகுண்டு முருகேசனிடம் எப்படி இருக்கிறாய், எதற்காக வந்தாய்? என்று கேட்டுள்ளார்.
அப்போது, முருகேசன், உன்னை வெட்டுவதற்காகத்தான் வந்துள்ளேன் என்று கூறியபடி, அரிவாளை எடுத்து உமரிசங்கரை வெட்ட முயன்றுள்ளார். இதில் இருந்து தப்பிய உமரிசங்கர், உடனடியாக ஆத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அப்போது, வெடிகுண்டு முருகேசனை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி முயன்றுள்ளார். இதில், சப்-இன்ஸ்பெக்டரை, முருகேசன் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலையின் பின்பகுதி, இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. தப்பியோடிய வெடிகுண்டு முருகேசனை காவல்துறையினர் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
பட்டப்பகலிலேயே சப்-இன்ஸ்பெக்டரை, ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications