பணமோசடி வழக்கு.... வேந்தர் மூவிஸ் மதன் வாக்குமூலம் - 20 பேருக்கு சம்மன்
மாணவர்களிடம் மோசடி செய்த பணத்தை திரைப்படத்துறையை சேர்ந்த நண்பர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக மதன் கூறியதை அடுத்து 20 பேரை விசாரணைக்கு வருமாறு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: மருத்துவ கல்லுாரியில் சீட் வாங்கித் தருவதாக, 85 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், வேந்தர் மூவிஸ் மதன் சில தினங்களுக்கு முன்னர் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைதான மதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் கடந்த சில தினங்களாக விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது எங்கெல்லாம் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் கேட்டுள்ளனர். மேலும் மதனின் 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அதிலிருந்த வாட்சப் உரையாடல்கள் குறித்தும் விசாரணையின் போது கேட்டறிந்ததாக தெரிகிறது.
மோசடி செய்த பணத்தை, நடிகர், தயாரிப்பாளர்கள் சிலரிடம் கொடுத்துள்ளதாக, மதன் கூறியுள்ளான். அதையடுத்து, அந்த நடிகர், தயாரிப்பாளர்களை விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மதனிடம், 650 கேள்விகள் கேட்கப்பட்டன, அவற்றில், மோசடி பணம் குறித்த கேள்விக்கு, படத்தை வாங்கி வெளியிடுவதற்காக, முன் பணமாக, ஒரு நடிகர், சில தயாரிப்பாளர்களிடம் கொடுத்துள்ளதாக மதன் கூறியுள்ளார்.
மாணவர்களிடம் வசூலித்த பணத்தில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார் மதன் இதனையடுத்து சம்பந்தப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 20 பேருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. திரையுலக பிரமுகர்கள், ஐ.ஜே.கே. கட்சி நிர்வாகிகள், மதன் நண்பர்களை விசாரணைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications