போலீஸ் பணம் கொடுக்குறவங்கள கைது செய்து பாதி வழியிலேயே விட்டுறாங்களே- குற்றம்சாட்டும் ஓபிஎஸ் டீம்!
ஆர்கே நகரில் நடக்கும் பண விநியோகம் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த ஓபிஎஸ் டீம், பணம் கொடுப்பவர்களைக் கைது செய்து பாதியிலேயே விட்டுவிடுகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை: ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்யும் டிடிவி தினகரன் அணியினரை கைது செய்து, பாதி வழியிலேயே விட்டு விடுகிறார்கள் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே .பி முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்கே நகரில் நடக்கவிருக்கும் இடைதேர்தலையொட்டி, அங்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் என ஆர்கே நகரே ரணகளமாக உள்ளது. இதில் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் அணியினர் தான் பல்வேறு வகையில் பணம் மற்றும் பொருட்களையும் விநியோகம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணியினர் புகார் அளித்தனர். அதன்பின் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, மைத்ரேயன் எம்பி ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது கே.பி முனுசாமி கூறும்போது, ''தினகரன் அணியினர்தான் பணப்பட்டுவாடா செய்கின்றனர். ஆனால் அவர்களுடைய ஆட்சி நடப்பதால் புகாரின் பேரில் கைது செய்யப்படும் அவர்களின் ஆட்களை பாதி வழியிலேயே போலீசார் விட்டு விடுகின்றனர்'' என்று கூறினார்.
ஆனால், ''பாஜகவினர் நீங்களும் பண பட்டுவாடா செய்வதாகக் கூறுகிறார்களே'' என்ற கேள்விக்கு, ''தமிழகத்தில் பாஜக என்ற கட்சி இருக்கிறதா?'' என்று பதில் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய கே.பி முனுசாமி, சசிகலா குடும்பத்தை விரட்டி விட்டால் அதிமுக நீண்ட நாட்கள் தமிழகத்தை ஆளும் என்று கூறினார்.