அரசு வேலை தொடர்பாக அமைச்சரின் பிஏ விடம் பேசிய மகேஷ் படுகாயம்... திட்டமிட்டு நடந்த விபத்தா?
விழுப்புரம்: அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர் வேலை தொடர்பாக அமைச்சரின் பிஏவிடம் வாட்ஸ் அப்பில் பேசிய போலீஸ்காரர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியு இது திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்தா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் மகேஷ், 35. இவர், தனது உறவினர் ஒருவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணி பெற்று தருவதற்காக அமைச்சர் உதவியாளரிடம் பணம் கொடுத்து உள்ளதாகவும், அந்த வேலை எப்போது கிடைக்கும் என்று பேசியது வாட்ஸ்அப்பில் நேற்று வெளியானது.

வாட்ஸ் அப் மூலம் பரவிய இந்த உரையாடல் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுசம்பந்தமாக போலீஸ்காரர் மகேசிடம் காவல்துறை உயரதிகாரிகள் பேசியதாக தெரிகிறது. இதனால் மகேஷ் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்கிழமையன்று இரவு மகேஷ், காவல் நிலையத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றார். எலவனாசூர்கோட்டை பிரிவு சாலையில் வரும்போது அவ்வழியாக சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து பைக் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகேஷ் தலையில் பலத்த காயம் அடைந்தார். ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
இதனிடையே தகவல் கிடைத்து எலவனாசூர்கோட்டை போலீசார் விரைந்து சென்று மகேசை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.அமைச்சர் பிஏ உடனான உடையாடல் வாட்ஸ்அப்பில் வெளியான நிலையில் விபத்தில் போலீஸ்காரர் மகேஷ் படுகாயமடைந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications