தஞ்சை விளாரில் விவசாய குடும்பத்தில் பிறந்து தமிழக அரசியலில் தடம் பதித்த 'சசிகலா' நடராஜன்!
தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் பிறந்து அரசியலில் தடம் படித்தவர் சசிகலா கணவர் நடராஜன்.
சென்னை: ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் விளார் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து மாணவர் பருவத்திலேயே போராட்டத்தில் பங்கேற்று அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தவர் நடராஜன். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றி உடல் நலக்குறைவினால் இன்று காலமானார்.
எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதாவை அதிமுகவிற்கு தலைவியாகவும், தமிழக முதல்வராக்கவும் பின்னாலிருந்து இயக்கியவர்களின் சசிகலா கணவர் நடராஜனுக்கு முக்கிய பங்கு உண்டு. நடராஜனுக்கு வேண்டியவர்கள் சுருக்கமாக எம்என் என்று அழைத்தனர்.
30 ஆண்டுகாலம் வாழ்ந்தவர்களும் இல்லை, 30 ஆண்டு காலம் தாழ்ந்தவர்களும் இல்லை என்பார்கள். இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சசிகலாவிற்கும் அவரது கணவர் நடராஜனுக்கும் பொருத்தமானதாகிவிடுகிறது.
நேரடி அரசியலில் இறங்காமல் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் பின்னால் இருந்து இயக்கியவர் நடராஜன்.
விளார் நடராஜன்
தஞ்சையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள விளார் என்ற ஊரில் இருந்த சிறு விவசாயி மருதப்பன். அவருடைய மகன் நடராஜன். 1960களின் காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் தீயாய் பரவிய திராவிட இயக்கங்கள், நடராஜனிடம் தமிழ் ஆர்வத்தையும், அரசியல் ஈடுபாட்டையும் உருவாக்கி இருந்தது. தி.மு.க மாணவர் இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு நடராஜன் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
மக்கள் தொடர்பு துறை
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவராக இருந்த நடராஜன், 1965ஆம் ஆண்டு நடைபெற்ற, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, தி.மு.க ஆட்சியில் ஏ.பி.ஆர்.ஓ வேலைகளில் கருணாநிதி முன்னுரிமை கொடுத்தார். கருணாநிதி தமிழக முதல்வராக முதல் முறை ஆனபோது, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ஏபிஆர்ஓவாக நடராஜனை நியமித்தார்.
சசிகலா உடன் வாழ்க்கை
அரசு வேலை கிடைத்ததும் 1975ம் ஆண்டு விளார் விவசாயி மருதப்பனின் மகன் நடராஜன், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த விவேகானந்தனின் மகள் சசிகலாவைத் திருமணம் செய்துகொண்டார். நடராஜன்-சசிகலா திருமணத்தை தி.மு.க தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.
ஜெயலலிதாவின் அறிமுகம்
1982 ஆம் ஆண்டு கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளர் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தார். கடலூரில் ஜெயலலிதா நடத்திய சத்துணவுத் திட்ட நிகழ்ச்சியை அப்போது கடலூர் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன் சிறப்பான செய்தியாக்கி மாநிலம் முழுவதும் கொண்டு சேர்த்தார். இது ஜெயலலிதாவை கவர்ந்தது.
சென்னையில் வாழ்க்கை
சந்திரலேகா ஐஏஎஸ்- ஜெயலலிதா இடையே நட்பு உருவானது. முதல்வர் எம்.ஜி.ஆர், உடனடியாக சந்திரலேகாவை சென்னைக்கு மாற்றினார். சந்திரலேகாவிடம் பிஆர்ஓ வாக இருந்த நடராஜனும் சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கினார். தன் மனைவி சசிகலாவுடன், ஆழ்வார்பேட்டையில் குடியேறினார்.
போயஸ்கார்டனில் சசிகலா
நடராஜன் பி.ஆர்.ஓ என்பதால், புகைப்படக்காரர்கள், வீடியோ எடுப்பவர்களின் தொடர்பு அவருக்கு இருந்தது. வீடியோ கடையை தொடங்கினார் சசிகலா. ஜெயலலிதாவின் சுற்றுப் பயணங்களை படமெடுத்துக் கொடுக்கும் வாய்ப்பு சசிகலாவின் வினோத் வீடியோ விஷனுக்குக் கிடைக்க, போயஸ்கார்டனுக்குள் அடியெடுத்து வைத்தார் சசிகலா. மெல்ல மெல்ல ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவராக சசிகலாவை மாற்றினார் நடராஜன்.
நடராஜனை நம்பிய ஜெயலலிதா
தமிழக முதல்வரும் ஜெயலலிதாவின் அரசியல் ஆசானுமாக இருந்த எம்ஜிஆர் மறைந்த போது, கட்சி இரண்டாக உடைந்தது. தனித்து விடப்பட்ட ஜெயலலிதாவின் பின்னால் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் அணி திரண்டனர். சசிகலா, நடராஜனை முழுவதுமாக நம்பினார் ஜெயலலிதா. தேர்தலில் சீட்டு வழங்குவதாக கட்சிகாரர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், ஏமாற்றப்பட்டவர்கள் பணத்துக்காக முறையிட்ட போது, கொலை மிரட்டல் விட்டதாகவும் நடராஜன் மீது வழக்கு தொடரப்பட்டது. கைதானார் நடராஜன்.
பிரிவின் விதை
இதனைக் கண்டித்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று, சபாநாயகருக்கு கடிதம் எழுதினார் ஜெயலலிதா. ஆனால் அந்த கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பவில்லை. நடராஜன் வசம் அந்த கடிதம் இருந்தது, இதனை கைப்பற்றிய போலீசார் கருணாநிதியிடம் கொடுக்க அது பத்திரிகைகளில் வெளியானது.
நடராஜனும் ஜெயலலிதாவும் பிரிவதற்கான விதை விழுந்தது இங்கேதான்.
எம் நடராஜன்
வேதா நிலையத்திற்கு நடராஜன் நுழைய தடை போட்டார். ஆனாலும் சசிகலாவை தன்னுடனேயே வைத்துக்கொண்டார். புதிய பார்வை என்ற பத்திரிக்கையை தொடங்கி அதில் எழுதினார் நடராஜன். 2011ஆம் ஆண்டு நடராஜன், தன் செல்வாக்கை பயன்படுத்தி கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற திட்டமிட்டதாக தகவல் கிடைக்கவே, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. போயஸ்கார்டனை விட்டு சசிகலாவை வெளியேற்றிய அவர், பின்னர் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு சசிகலாவை மட்டும் சேர்த்தார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் மோசமடையவே சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகமும், கல்லீரலும் பொறுத்தப்படவே, நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பினார். சொல்லப்போனால் நடராஜனுக்கு இது மறுபிறவி என்றே சொல்ல வேண்டும்.
நடராஜன் காலமானார்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொகுசு கார் மோசடி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நடராஜனுக்கு 2 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்தது.நடராஜன் சிறை செல்வது உறுதியானது. உடல்நிலையை காரணம் காட்டி தப்பினார் நடராஜன். வீட்டில் ஓய்வெடுத்து வந்த நடராஜனுக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மீண்டும் மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றி உடல் நலக்குறைவினால் இன்று காலமானார்.