சுவாதி கொலையாளி ராம்குமார் கைது ஆறுதல் தருகிறது... ஜி.ஆர்., திருமா
சென்னை: பொறியாளர் சுவாதியை படுகொலை செய்த ராம்குமாரை போலீசார் கைது செய்தது ஆறுதல் தருகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பொறியாளர் சுவாதி கடந்த 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலையை செய்த கொலையாளி ராம்குமாரை செங்கோட்டை அருகே போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

இக்கைது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன், சுவாதி கொலையில் கொலையாளியை கைது செய்துள்ள போலீசாரின் திறமையை பாராட்டுகிறோம். கொலையாளியை கைது செய்தது ஆறுதல் அளிக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் குற்ற சம்பவங்களை தடுக்க சி.சி.டி.வி பொறுத்த அரசு முன் வரவேண்டும் என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், சுவாதி கொலையில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை பாராட்டுகிறேன். இதில் கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும் இனி இது போன்ற கொடூர சம்பவங்கள் பொது இடங்களில் நடக்காத அளவுக்கு தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் கூறுகையில், சுவாதி கொலையில் போலீசார் திறமையாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளதை பாராட்டுகிறேன். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் புதிய சட்டங்களை உடனடியாக இயற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications