அம்பேத்கர் 125வது பிறந்தநாள்: ஜெ., ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ மரியாதை
சென்னை: சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் அம்பேத்கரின் உருவ சிலைக்கும், உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
அண்ணல் அம்பேத்கர் பல்வேறு மத, இன, மொழி, சமூக பழக்க வழக்கங்கள் கொண்ட இந்திய நாட்டை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஒருங்கிணைத்தவர். இவர் அரசியல் மாமேதை. தேசிய தலைவராகவும் திகழ்ந்தவர். சமத்துவத்தை வலியுறுத்தியவர்.
ஒவ்வொருவரும் முழுமனித நிலையை அடைய கல்வி, செல்வம், உழைப்பு இம்மூன்றும் தேவை என்றும் செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம் என்றும், உழைப்பும், கல்வியும் அற்ற செல்வம் மிருகத் தனம் என்றும் கூறினார்.
கல்வி என்பது தகவல்களை திணிப்பதாக இருக்கக்கூடாது. அது ஒருவனது ஊக்கத்தை தூண்டுவதோடு தனித்தன்மையை வெளிக்கொணர்வதாக இருக்க வேண்டும் என்பது கல்வி பற்றி அம்பேத்கரின் கருத்தாகும். அவரது 125வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஜெயலலிதா
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஸ்டாலின்
சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விஜயகாந்த் - மநகூ தலைவர்கள்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

வைகோ நம்பிக்கை
முதல் முறையாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையப் போகிறது. அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரம் என்ற அம்பேத்கரின் கனவு நனவாகப் போகிறது என்று அப்போது வைகோ கூறினார். நடைபெற உள்ள தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தொண்டர்கள் பாடுபடவேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டார்.

கூட்டணி ஆட்சி
செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், மக்களின் ஆதரவு பெற்று வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாட்சி அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications