அண்ணே, அடுத்து என்னண்ணே தரலாம்... ரூம் போட்டு யோசிக்கும் அதிமுக, திமுக!
சென்னை: நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் மக்களைக் கவர புதிதாக என்னப் பொருட்களை இலவசமாக தரலாம் என தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக யோசித்து வருகின்றனவாம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் அறிக்கைகளைத் தயாரிக்கும் பணியில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் அதிரடியாக என்ன மாதிரியான இலவசங்களைத் தரலாம் என அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்களாம்.
வாய்ச்சொல் வீரர்கள்...
இலவச அறிவிப்புகளில் தமிழக கட்சிகள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நமக்கு முந்தைய தேர்தல்கள் நிரூபித்துள்ளன. வாய்ச்சொல்லில் வீரர்களாக பலர் போட்டி போட்டுக்கொண்டு இலவச அறிவுப்புகளை வெளியிட்டனர்.
போட்டி போட்டு...
நீ டிவியும், அடுப்பும் தந்தால், நான் மிக்சியும், கிரைண்டரும் தருவேன், நீ அரிசி இலவசமாகக் கொடுத்தால் அதை வீட்டிற்கே வந்து நாங்கள் கொடுப்போம் என ஆளாளுக்கு முந்தைய ஆண்டுகளில் தங்களது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தனர்.
வெற்றிக்குப் பின் யோசனை...
ஆனால், வெற்றி பெற்றதும் தேர்தல் அறிக்கைகளில் கூறிய வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டதா என்றால் இல்லை. வெற்றிக்குப் பின்னரே தங்களது இலவச அறிவிப்புகளின் சாதக, பாதகங்களை தலைவர்கள் யோசித்தனர்.
இலவசத்திலும் ஊழல்..
இதனால் உடனடியாக அனைவருக்கும் அந்த இலவசங்கள் சென்று சேரவில்லை. இலவசங்களைப் பெற்றவர்களுக்கும் அது திருப்தியளிக்கவில்லை. காரணம் அதிலும் ஊழல் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
மக்களின் ஆசை...
ஆனால், எது எப்படியோ எந்தக் கடையில் விலை குறைவோ அங்கு கூட்டம் அல்லோலகலப் படுவது போல், இலவசங்களை வாரி இறைத்த கட்சிகள் வசம் மக்களும் சருக்கித் தான் விழுந்தனர். இதை தேர்தல் முடிவுகள் உள்ளங்கை புண்ணாக வெளிக்காட்டியது.
தீவிர ஆலோசனை...
இந்த சூழ்நிலையில் இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, வழக்கம் போல மக்களுக்கு என்ன மாதிரியான இலவசங்களைத் தந்து வாக்குகளை அள்ளலாம் என கட்சிகள் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளனவாம்.
ரகசியம்... அது பரம ரகசியம்
இதற்கெனவே அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தனிக்குழுக்களையும் அமைத்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது தொடர்பான விபரங்கள் படு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம்.
ரைட்டு விடு... கத்தரிக்காய் முத்துனா கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும்!