ஓய்ந்தது ஸ்ரீரங்கம் தேர்தல் பிரச்சாரம்... வெளியேறினர் வெளியூர் தொண்டர்கள்!
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது.
இதனால் தொகுதியில் முகாமிட்டு இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களுடைய பிரச்சார அலைகளை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பத் தொடங்கினர்.

மாலை 5 மணிக்குள் வெளிநபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வேட்பாளர்களுக்காக பிரச்சாரக் களத்தில் இறங்கி இவ்வளவு நாட்களாக உழைத்த வெளியூர்க்கார்கள் தொகுதியை விட்டுக் கிளம்பிச் சென்று விட்டனர்.
அதிமுக, திமுக, பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என நான்கு முனைப் போட்டியைச் சந்தித்துள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில், வாக்குப்பதிவு 13ம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடை பெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான பேரணிகள் பொதுக் கூட்டங்கள் போன்ற எந்தவிதமான பிரசாரமும் செய்யக் கூடாது. மாலை 6 மணிக்குமேல் தொகுதிக்கு வெளியே இருந்து பிரசாரத்திற்காக அழைத்து வரப்பட்டவர்களும், தொகுதியில் வாக்காளர்களாக இல்லாத அனைத்துக்கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்களும் தொகுதியிலிருந்து உடனடியாக வெளியே செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வந்து முகாமிட்டிருந்த கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் இன்று கடைசிகட்டமாக பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்தனர்

வீடுகள், லாட்ஜுகள், திருமண மண்டபங்களில் தங்கி இருந்த தொண்டர்கள் இன்று மதியத்தில் இருந்தே காலி செய்ய தொடங்கி விட்டனர். மாலைக்குள் அனைவருக்கும் வெளியேறி விட்டார்களா என்று தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

இன்று மாலை 6 மணிக்குமேல் வெளியூர்க்காரர்கள் தொகுதிக்குள் இருக்கக் கூடாது என்பதால் மந்திரித்துவிட்டதுபோல் சுற்றிக் கொண்டிருந்த ஆளும்கட்சியின் அமைச்சர்களும், மற்ற கட்சி பிரதிநிதிகள், தொண்டர்களும் பிரச்சாரம் ஓய்ந்துவிட்டதால் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு நடையைக் கட்ட ஆரம்பித்துவிட்டனர்.
மதுக் கடைகள் மூடல்
இதற்கிடையே, வாக்குப் பதிவை முன்னிட்டு திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி முதல் 13ம் தேதி நள்ளிரவு வரை டாஸ்மாக் மதுக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுக் கடைகள் மூடப்பட்டன.












Click it and Unblock the Notifications