கோவை: திருமணத்திற்கு மறுத்ததால் வீடு புகுந்து காதலியைக் குத்திக் கொன்ற காதலன்
கோவை: திருமணத்திற்கு மறுத்ததால் பட்டதாரி பெண்ணை வீடு புகுந்து காதலர் குத்திக் கொன்ற சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகிலுள்ள சூளேஸ்வரன்பட்டி காந்திபுரத்தை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சுப்ரியா (23). கணினி பட்டப்படிப்பு முடித்த தற்போது வீட்டில் இருக்கும் சுப்ரியா, அதே பகுதியில் 'மசாலா ஏஜென்சி' நடத்தும் தங்கதுரை (27) என்பவரை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், திருமணப் பேச்சும் நடத்தப்பட்டது. இந்நிலையில், சமீபகாலமாக தங்கதுரையின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவருடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார் சுப்ரியா. மேலும், தங்கதுரையை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என வீட்டில் தெரிவித்த சுப்ரியா, திருமணத்தை நிறுத்தச் சொல்லி விட்டாராம்.
ஆனால், தொடர்ந்து சுப்ரியாவை தொந்தரவு செய்து வந்துள்ளார் தங்கதுரை. எனவே, அவர் பேரில் இரு வாரங்களுக்கு முன்னர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார் சுப்ரியா.
இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் தங்கதுரையை அழைத்து, 'இனி சுப்ரியாவை தொந்தரவு செய்யக்கூடாது' என எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் சுப்ரியா மீது தங்கதுரை கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் சுப்ரியா மட்டும் தனிமையில் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு சென்ற தங்கதுரை, ‘தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு' அவரை மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு சுப்ரியா மறுக்கவே, ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுப்ரியாவின் கழுத்து, வயிறு, மார்பு ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு ஓடியுள்ளார். சுப்ரியாவில் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு சுப்ரியாவைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொள்ளாச்சி கிழக்கு போலீசார் தலைமறைவான தங்கதுரையை தேடி வருகின்றனர்.