வாய்த்தகராறு.. கள்ளக்காதலியை ஓட,ஓட விரட்டி குத்திக் கொன்ற காதலன்!
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கள்ளக்காதலியை காதலனே ஓட ஓட விரட்டிச் சென்று கத்தியால் குத்திய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சாத்துப்பாறை சித்தூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சிங்கான் என்ற ஆறுச்சாமி கூலி தொழிலாளி.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் அந்த பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.
தோட்டத்தில் பழக்கம்:
அப்போது அதே தோட்டத்தில் மணியாள் என்பவர் வேலை பார்த்து வந்தார். மணியாளின் கணவர் இறந்து விட்டார். அதனால் தனியாக இருந்த மணியாளுக்கும், ஆறுச்சாமிக்கும் இடையே பழக்கம் உண்டாகி கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
அடிக்கடி தகராறு:
இருவரும் தாலி கட்டாமல் வாழ்ந்து வந்தனர். மணியாள் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வந்தார். ஆனால், ஆறுச்சாமி வேலைக்கு சென்று வந்து, செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
திடீர் தகராறு:
இந்த நிலையில் நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு வந்த ஆறுச்சாமி, மணியாளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மணியாளுக்கும், ஆறுச்சாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
விரட்டிச் சென்ற ஆறுச்சாமி:
தகராறு முற்றியதால் ஆறுச்சாமி, மணியாளை தாக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட மணியாள் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் ஆறுச்சாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு மணியாளை விரட்டிச் சென்றார்.
உயிரிழந்த மணியாள்:
அந்த பகுதியில் உள்ள மயானத்தில் வைத்து ஆறுச்சாமி, மணியாளை மடக்கி பிடித்து அவரது கழுத்தில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மணியாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் கைது:
இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆறுச்சாமியை பிடித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணியாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட ஆறுச்சாமி சிறையில் அடைக்கப்பட்டார்.