வாக்காளர் பட்டியல் பிரச்சனை: கிழக்கு தாம்பரத்தில் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்
சென்னை: சென்னை கிழக்கு தாம்பரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என 86 பேரை வாக்களிக்க விடாததால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவாடிக்கு வாக்களிக்க சென்றவர்களில் 86 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததை தேர்தல் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த 86 பேரையும் வாக்களிக்க அவர்கள் அனுமதிக்கவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் வழக்கறிஞர் பாலாஜி மதிமுக வேட்பாளர் மாசிலாமணி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆகியோருக்கு தெரியப்படுத்தினார். உடனே மாசிலாமணி தேர்தல் பொறுப்பு அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தேர்தல் பொறுப்பு அதிகாரி காஞ்சிபுரம் கலெக்டரிடம் இருந்து தகவல் பெற்று வாக்காளர் இணைப்புப் பட்டியலை மீண்டும் சரிபார்த்த பிறகு அந்த 86 பேரையும் வாக்களிக்க அனுமதித்தார்.
இந்த சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.