ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும்.. சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்
சிவகங்கை: நிச்சயம் ஜல்லிக்கட்டு நடைபெறும். அனைவரும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சிவன் கோவிலில் அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தபோது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படுமா, மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒரு சில அமைப்பினர் இதற்கு பலத்த இடையூறுகளை செய்து வருகின்றனர். அவர்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. முந்தைய காங்கிரஸ் அரசு பிறப்பித்த ஒரு அரசாணையால்தான் இந்தத் தடை வந்தது. தற்போது அதை நீக்கி புதிய அரசாணை அல்லது அவசரசச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து உறுதிமொழி அளித்தவண்ணம் உள்ளனர். இருப்பினும் இதுவரை மத்திய அரசிடமிருந்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.