திமுக ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது.. சொல்கிறார் பொன்.ராதகிருஷ்ணன்
திருப்பூர்: காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இலங்கையுடன் ஒப்பந்தம் ஏற்பட்ட போது திமுக பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாமல் கச்சத்தீவை தாரைவார்த்தது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாம் நடைபெற்று வருகிறது. விவதாத்தின் போது எதிர்கட்சிகள் கச்சத்தீவு தொடர்பான பிரச்சினையை எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவு தொடர்பான கேள்வியைக் கேட்க திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது. திமுக ஆட்சியில் முதல்வராக கருணாநிதி இருந்தபோதுதான், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்று கூறினார்.

இந்த விவகாரம் அவையை தாண்டியும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறிவருகின்றனர். இந்நிலையில் திமுக ஆட்சிக்காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் காந்திய மக்கள் இயக்க்கத்தின் சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இலங்கையுடன் ஒப்பந்தம் ஏற்பட்ட போது திமுக பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாமல் கச்சத்தீவை தாரைவார்த்தது எனத் தெரிவித்தார்.
மேலும் கச்சத்தீவு விவகாரத்தில் அப்போதே திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகாலங்களில் எதேனும் முயற்சி மேற்கொண்டிருந்தால் இந்த நிலை நீடித்திருக்காது எனவும் கூறினார்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் எந்த கூட்டணியும் வலுப்பெறாது எனவும் அந்தந்த உள்ளாட்சிகளின் பிரச்சினைகளுக் கேற்ப வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் எனவும் பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீடு மூலம் பாதுகாப்பு மேம்படும் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications