விபத்தில் சிக்கி காயமடைந்த 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய பொன்.ராதாகிருஷ்ணன்
கோவை: கோவை அருகே சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த 2 பேரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கோவை மதுக்கரை புறவழிச்சாலையில் ஜெ.ஜெ.நகர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பாலக்காட்டைச் சேர்ந்த ஆர்.முரளிதரன் என்பவரின் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் முரளிதரனின் வாகனத்தில் மோதியது. அந்த இருசக்கர வாகனத்தை ஜி.ஆர்.டி. பகுதியைச் சேர்ந்த கே.காந்திராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த விபத்தில் காந்திராஜனும் அவரது வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக காரில் வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காயமடைந்த பாலகிருஷ்ணன், காந்திராஜன் ஆகியோரை மீட்டு பாதுகாப்புக்கு வந்த போலீஸாரின் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சாலை விபத்து குறித்து செட்டிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.