இவன் மின்னலின் மகன்.. இடியின் இளவல்.. புகழின் புதல்வன்.. மரண தேவதையின் மடியில் சாய்ந்தவன்!
மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாள் இன்று.
சென்னை: அசாத்திய இசையாலும், அபார நடனத்தாலும் உலகை மகிழ்த்து வந்த மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாள் இன்று!
பிறந்த 10 வருடத்திலேயே புயலென சுழன்று இடியென பாடி தனக்கென ஒரு புதிய முத்திரையை பதித்தவர் மைக்கேல் ஜாக்சன். அவர் பாடி தயாரித்து வெளியிட்ட குறுந்தகடுகள் பூபாளமெங்கும் நிறைந்து கிடந்தது.
குறிப்பாக "திரில்லர்" என்ற குறுந்தகடு ஒரே நாளில் 10 கோடி எண்ணிக்கையில் விற்று வரலாறு படைத்தது. இந்த வரலாறு வேறு யாராலும் அவ்வளவு சீக்கிரம் உடைக்கப்படுமா என்பது சந்தேகம்தான்.

முரண்பாடுகளால் நிறைந்தவர்
மைக்கேல் ஜாக்சன் முரண்பாடுகளால் முற்றுகையிடப்பட்டவர். கோடிக்கணக்கில் சம்பாதித்தார்... ஏழை, குழந்தைகள் மீதும் சிறுவர்கள் மீதும் இவருக்கு இருந்த அன்பையும் ஈடுபாட்டையும் சிலர் கொச்சைப்படுத்தி அதையே காரணமாக்கி கோடிக்கணக்கில் பணம் பிடுங்கிய சுயநலப் பேர்வழிகளும் உண்டு. அவரது பிரேத பரிசோதனை பல உண்மைகளை உணர்த்தியது. உடலெங்கும் காயங்களின் வடுக்களும், சிராய்ப்புகளும் இருந்தன. பல்வேறு வகையான போதை மாத்திரைகளும், வலி நிவாரணிகளும் அவரை மயக்கத்தில் ஆழ்த்தியிருந்தன.

ஒபாமா-ஜாக்சன்
வாழ்க்கை பின்னணி, சமூக சூழல், இளம் பருவ காலத்து வளர்ப்பு போன்றவற்றில் அதிபர் ஒபாமாவுக்கும், மைக்கேல் ஜாக்சனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. கறுப்பின சமூகத்தில் பிறந்தார்.... அவருக்கு போதிய கவனிப்பும், பராமரிப்பும் இல்லை.. ஆனால் இயற்கையான உந்துததாலும், எப்படியாகிலும் சாதிக்க வேண்டும் என்கிற பிடிவாதத்தாலும் சுயமாக உருவாகி பிரம்மாண்டமாக வளர்ந்தார் மைக்கேல் ஜாக்சன்!

நெறிப்படுத்த யாருமே இல்லை
உலகம் இவரை உண்மையான கலைஞராக ஏற்றுக் கொண்டது. மதம், நிறம், இனம் போன்ற எல்லா எல்லைக் கோடுகளையும் இவரது இசைவெள்ளம் உடைத்து நொறுக்கியது. புயலென சுழன்று பூமிப் பந்தையே வளைத்து போட்டது. ஆயினும் அவரை அரவணைத்து பக்குவப்படுத்தவும், நல்வழியில் நெறிப்படுத்தவும் யாருமே இல்லாமல் போனார்கள்.

வெறுமையான வாழ்வு
ஒபாமாவிற்காவது அவரது பாட்டி இருந்தார். ஆனால் மைக்கேல் ஜாக்சன் விண்ணின் உச்சியை நோக்கி பயணித்து கொண்டிருந்தபோதே அவரது குடும்ப உறவுகளும், ரத்த சம்பந்தமும் சீர்கெட்டு போயின. இரண்டு பெண்களை மணந்தும் அவரது தாம்பத்ய வாழ்க்கை தோல்வி அடைந்தது. குழந்தைகளை பெற்றும் அவற்றின் முழுமையான அன்பு அவருக்கு கிடைக்காமல் போயிற்று.

மரித்த பின்னும் வாழ்கிறார்
உலக மக்களை மிக அதிகமாக நேசித்தவர் மைக்கேல் ஜாக்சன். மரித்த பின்னரும் மைக்கேல் ஜாக்சன் இன்னமும் வாழ்கிறார்! ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் போவும், ஜீவிதமான ஓவியத்திற்கு பிகாசா போலவும், புயலைப் போல் பறந்து பறந்து பந்தாடிய புருஸ்லீ போலவும், மேற்கத்திய இசையின் முடிசூடாமன்னன் எல்விஸ் பிரெஸ்லி போலவும், மைக்கேல் ஜாக்சனும் மக்கள் மத்தியில் வாழ்வார்!












Click it and Unblock the Notifications