இஞ்சின் பழுது காரணமாக பொதிகை ரயில் 3 மணிநேரம் தாமதம் -பயணிகள் அவதி

தினமும் சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தினமும் செங்கோட்டையில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு காலை 7.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. அதேபோல், மறுமார்க்கத்தில் இரவு 8.10க்கு சென்னையிலிருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேர்கிறது.
வழக்கம் போல, நேற்றிரவு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை விருதுநகர் அருகே வரும்போது திடீர் என இஞ்சின் பழுது ஏற்பட்டுள்ளது. டிரைவர் நடுவழியில் ரயிலை நிறுத்தாமல் மிகவும் சாமர்த்தியமாக விருதுநகர் ரயில்நிலையத்திற்கு கொண்டுவந்து சேர்த்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக மதுரைக்கு தகவல் சொல்லி மாற்று எஞ்சின் 8.30மணியளவில் கொண்டுவரப்பட்டுபொதிகை ரயிலில் பொருத்தப்பட்டு சுமார் 3 மணிநேர காலதாமதத்தோடு ரயில் செங்கோட்டையை நோக்கி புறப்பட்டது. 3 மணி நேர கால தாமதத்தால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
தொடர்ந்து கடந்த சிலமாதங்களாகவே அடிக்கடி பொதிகை ரயில் எஞ்சின் கோளாறு ஏற்படுவதும்,மாற்று எஞ்சின் மதுரையிலிருந்து கொண்டுவந்து மாற்றுவதும்,இதனால் பயணிகள் பாதிப்பைடைவதும் தொடர்கதையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications